சுசீந்திரம்,
குமரி மாவட்ட கோவில்களில் வெயில் காலங்களில் பக்தர்கள் வசதிக்காக தரையில் வர்ணம் பூசும் பணி தீவிரம் நடந்தது.
கோவில்கள்
தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் தினமும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் செல்கிறார்கள். பெரும்பாலான கோவில் வளாகத்தில் தரையில் கருங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் மதிய வேளையில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கருங்கல் தரையில் நடந்துசெல்லும் போது வெப்பத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதை கருத்தில் கொண்டு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் கருங்கல் தரைகளில் ரப்பர் கலவை கலந்த வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.
குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் உத்தரவின் பேரில் குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய செல்லும் பாதைகளில் கருங்கல் பதிக்கப்பட்ட தரைகளில் ரப்பர் கலவை கலந்த வர்ணம் பூசும் பணி நடக்கிறது.
அதன்படி, சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வேளிமலை குமாரசாமி கோவில் போன்ற கோவில்களில் கருங்கல் தரையில் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.